கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து
இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவூரில் அமைந்துள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏப்ரல் 10, 2016 அன்று கிட்டத்தட்ட 03:30 மணிக்கு, வாணவெடி கொண்டாட்டங்களின்போது வெடி மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 111 நபர்கள் கொல்லப்பட்டனர்; 350க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர். உள்ளூர் தகவல்களின்படியும் கண்ணால் கண்டவர் சாட்சிகளின்படியும், இந்த வெடிவிபத்தும் தீ விபத்தும் கொண்டாட்டங்களின் அங்கமாக நடந்த வாணவேடிக்கைப் போட்டிக்காக காங்கிறீட்டு கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது தீப்பொறிகள் விழுந்ததால் நிகழ்ந்தது. இந்த வாணவேடிக்கைப் போட்டியை நடத்துவதற்கான அரசு அனுமதியை கோவில் நிர்வாகத்தினர் பெற்றிருக்கவில்லை. இந்த விழாவின்போது ஏறத்தாழ 15,000 இந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏழுநாட்கள் கொண்டாடப்பட்ட திருவிழாவின் கடைசி நாளாக இது இருந்தது.






